திகதி : 2025-05-18

திருவழிபாட்டுக்காலம்

பாஸ்கா காலம்

திருவழிபாட்டு வாரம்

ஐந்தாம் வாரம் - ஞாயிறுக்கிழமை

நாள் வாசகங்கள்

முதலாம் வாசகம்: திருத்தூதர் பணிகள் 14: 21b-27

திருப்பாடல் : திருப்பாடல் 145: 8-9. 10-11. 12-13ab (பல்லவி: 1)

இரண்டாம் வாசகம் : திருத்தூதர் யோவான் எழுதிய திருவெளிப்பா 21: 1-5

நற்செய்தி வாசகம் : ✠ யோவான் எழுதிய தூய நற்செய்தி 13: 31-33a, 34-35

Sacred Reading Texts:


பாஸ்கா 5ஆம் வாரம் - ஞாயிறு


முதல் வாசகம்

திருச்சபையைக் கூட்டி, கடவுள் தங்கள் வழியாகச் செய்த அனைத்தையும் அறிவித்தார்கள்.

திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து வாசகம் 14: 21b-27

அந்நாள்களில்

பவுலும் பர்னபாவும் லிஸ்திரா, இக்கோனியா, அந்தியோக்கியா ஆகிய நகரங்களுக்குத் திரும்பி வந்தார்கள். அங்குள்ள சீடர்களின் உள்ளத்தை அவர்கள் உறுதிப்படுத்தி, “நாம் பல வேதனைகள் வழியாகவே இறையாட்சிக்கு உட்படவேண்டும்” என்று கூறி நம்பிக்கையில் நிலைத்திருக்கும்படி அவர்களை ஊக்குவித்தார்கள். அவர்கள் ஒவ்வொரு திருச்சபையிலும் மூப்பர்களைத் தேர்ந்தெடுத்து நோன்பிருந்து இறைவனிடம் வேண்டித் தாங்கள் நம்பிக்கை கொண்டிருந்த ஆண்டவரிடம் அவர்களை ஒப்படைத்தார்கள்; பின்பு பிசிதியா வழியாகப் பம்பிலியா வந்தார்கள். பெருகை நகரில் இறைவார்த்தையை அறிவித்தபின் அத்தாலியா வந்தார்கள்; அங்கிருந்து கப்பலேறி அந்தியோக்கியா வந்தார்கள்; அங்குதான் அவர்கள் அருள் வழங்கும் கடவுளின் பணிக்கென்று அர்ப்பணிக்கப்பட்டார்கள். இப்போது அப்பணியைச் செய்து முடித்துவிட்டார்கள்.

அவர்கள் அங்கு வந்ததும் திருச்சபையைக் கூட்டி, கடவுள் தங்கள் வழியாகச் செய்த அனைத்தையும், அவர் பிற இனத்தவர்க்கு நம்பிக்கை கொள்ளும் வாய்ப்பைக் கொடுத்ததையும் அறிவித்தார்கள்.

ஆண்டவரின் அருள்வாக்கு.


பதிலுரைப் பாடல்

திபா 145: 8-9. 10-11. 12-13ab (பல்லவி: 1)

பல்லவி: என் கடவுளே, உம்மைப் புகழ்ந்து ஏத்துவேன்.

அல்லது: அல்லேலூயா.

8 ஆண்டவர் இரக்கமும் கனிவும் உடையவர்; எளிதில் சினம் கொள்ளாதவர்; பேரன்பு கொண்டவர்.

9 ஆண்டவர் எல்லாருக்கும் நன்மை செய்பவர்; தாம் உண்டாக்கிய அனைத்தின்மீதும் இரக்கம் காட்டுபவர். - பல்லவி

10 ஆண்டவரே, நீர் உருவாக்கிய யாவும் உமக்கு நன்றி செலுத்தும்; உம்முடைய அன்பர்கள் உம்மைப் போற்றுவார்கள்.

11 அவர்கள் உமது அரசின் மாட்சியை அறிவிப்பார்கள்; உமது வல்லமையைப் பற்றிப் பேசுவார்கள். - பல்லவி

12 மானிடர்க்கு உம் வல்லமைச் செயல்களையும் உமது அரசுக்குரிய மாட்சியின் பேரொளியையும் புலப்படுத்துவார்கள்.

13ab உமது அரசு எல்லாக் காலங்களிலுமுள்ள அரசு; உமது ஆளுகை தலைமுறை தலைமுறையாக உள்ளது. - பல்லவி


இரண்டாம் வாசகம்

கடவுள் அவர்களுடைய கண்ணீர் அனைத்தையும் துடைத்துவிடுவார்.

திருத்தூதர் யோவான் எழுதிய திருவெளிப்பாட்டிலிருந்து வாசகம் 21: 1-5

யோவான் நான் புதியதொரு விண்ணகத்தையும் புதியதொரு மண்ணகத்தையும் கண்டேன். முன்பு இருந்த விண்ணகமும் மண்ணகமும் மறைந்துவிட்டன. கடலும் இல்லாமற்போயிற்று.

அப்பொழுது புதிய எருசலேம் என்னும் திருநகர் கடவுளிடமிருந்து விண்ணகத்தை விட்டு இறங்கிவரக் கண்டேன். தன் மணமகனுக்காகத் தன்னையே அணி செய்துகொண்ட மணமகளைப்போல் அது ஆயத்தமாய் இருந்தது. பின்பு விண்ணகத்திலிருந்து எழுந்த பெரும் குரல் ஒன்றைக் கேட்டேன். அது, “இதோ! கடவுளின் உறைவிடம் மனிதர் நடுவே உள்ளது. அவர் அவர்கள் நடுவே குடியிருப்பார். அவர்கள் அவருக்கு மக்களாய் இருப்பார்கள். கடவுள் தாமே அவர்களோடு இருப்பார்; அவரே அவர்களுடைய கடவுளாய் இருப்பார். அவர்களுடைய கண்ணீர் அனைத்தையும் அவர் துடைத்துவிடுவார். இனிமேல் சாவு இராது, துயரம் இராது, அழுகை இராது, துன்பம் இராது; முன்பு இருந்தவையெல்லாம் மறைந்துவிட்டன” என்றது.

அப்பொழுது அரியணையில் வீற்றிருந்தவர், “இதோ! நான் அனைத்தையும் புதியது ஆக்குகிறேன்” என்று கூறினார். மேலும், “ ‘இவ்வாக்குகள் நம்பத்தக்கவை, உண்மையுள்ளவை’ என எழுது” என்றார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.


நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

யோவா 13: 34

அல்லேலூயா, அல்லேலூயா! ‘ஒருவர் மற்றவரிடம் அன்பு செலுத்துங்கள்’ என்னும் புதிய கட்டளையை நான் உங்களுக்குக் கொடுக்கிறேன். நான் உங்களிடம் அன்பு செலுத்தியது போல நீங்களும் ஒருவர் மற்றவரிடம் அன்பு செலுத்துங்கள், என்கிறார் ஆண்டவர். அல்லேலூயா.


நற்செய்தி வாசகம்

‘ஒருவர் மற்றவரிடம் அன்பு செலுத்துங்கள்’ என்னும் புதிய கட்டளையை நான் உங்களுக்குக் கொடுக்கிறேன்.

✠ யோவான் எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 13: 31-33a, 34-35

யூதாசு இறுதி இராவுணவின் அறையை விட்டு வெளியே போனபின் இயேசு, “இப்போது மானிடமகன் மாட்சி பெற்றுள்ளார். அவர் வழியாகக் கடவுளும் மாட்சி பெற்றுள்ளார். கடவுள் அவர் வழியாக மாட்சி பெற்றாரானால் கடவுளும் தம் வழியாய் அவரை மாட்சிப்படுத்துவார்; அதையும் உடனே செய்வார். பிள்ளைகளே, இன்னும் சிறிது காலமே உங்களோடு இருப்பேன்.

‘ஒருவர் மற்றவரிடம் அன்பு செலுத்துங்கள்’ என்னும் புதிய கட்டளையை நான் உங்களுக்குக் கொடுக்கிறேன். நான் உங்களிடம் அன்பு செலுத்தியது போல நீங்களும் ஒருவர் மற்றவரிடம் அன்பு செலுத்துங்கள். நீங்கள் ஒருவர் மற்றவருக்குச் செலுத்தும் அன்பிலிருந்து நீங்கள் என் சீடர்கள் என்பதை எல்லாரும் அறிந்துகொள்வர்” என்றார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

Prayers

காலைச் செபம்:

எல்லாம் வல்ல பரலோக பிதாவே, உம்மை போற்றுகின்றேன், புகழுகின்றேன், ஆராதிக்கின்றேன். நீரே பரிசுத்தர், நீரே உன்னதர், நீரே உண்மையும் உயிருமானமவர். என்னை படைத்து, உயிர் கொடுத்து, உருக்கொடுத்து, பாதுகாத்து பராமரித்து வருகின்ற உமது தயவுக்காக உமக்கு நன்றி கூறுகின்றேன். இன்று இன்னுமொரு அழகிய நாளை எனக்குத் தந்து உமது அன்பை சுவைக்கச் செய்தமைக்காக உமக்கு நன்றி சொல்கின்றேன். நீர் தருகின்ற அன்பை நான் பெற்று, அதனை உணர்ந்து, அனுபவித்து, அதனை மற்றவருடன் பகிர எனக்கு அருள் தாரும். இன்று எனது அன்றாட கடமைகளில் உமது உடனிருப்பை உணரவும்; அந்த அனுபவத்தை எனது அயலவருக்கு சாட்சிய வாழ்வால் எண்பிக்கவும் எனக்கு வரம் தாரும். ஆமென்

மாலைச் செபம்:

காலங்களைக் கடந்த கடவுளே, இறைவா, இந்த அழகான நாளை எனக்குத் தந்தமைக்காக உமக்கு நன்றி கூறுகின்றேன். இந்த நாளிலே உமது அன்பை, ஆதரவை, உடனிருப்பை கண்டுகொண்டேன். நான் செய்து முடித்த வேலைகள், சந்தித்த மனிதர்கள், என்னில் எழுந்த உணர்வுகள், எண்ணங்கள் அனைத்தையும் உமது பாத காணிக்கையாக்குகின்றேன். கனிவாய் ஏற்றருளும் அத்தோடு எனது உடலுக்கும், உள்ளத்துக்கும் அமைதியும் இளைப்பாறுதலும் தாரும். நாளைய நாளிலே நான் கண்விழித்து உமது அழகான வாழாவைச் சுவைக்க அருள் தாரும். ஆமென் 

திருப்பலி

அருமருந்தாகும் திருவிருந்து

அருட்பணியாளர்: தந்தை, மகன், தூய ஆவியாரின் பெயராலே.
எல்லோரும்: ஆமென்.
அ.ப.: நம் ஆண்டவராகிய இயேசு  கிறிஸ்துவின் அருளும் கடவுளின் அன்பும் தூய ஆவியாரின் நட்புறவும்  உங்கள் அனைவரோடும்  இருப்பதாக.
எல்.: உம் ஆன்மாவோடும் இருப்பதாக
அ.ப.: சகோதர, சகோதரிகளே, தூய மறைநிகழ்வுகளைக் கொண்டாட நாம் தகுதி பெறும் பொருட்டு நம் பாவங்களை ஏற்றுக் கொள்வோம்.
எல்.: எல்லா வல்ல இறைவனிடமும், சகோதர சகோதரிகளே, உங்களிடமும் நான் பாவி என ஏற்றுக் கொள்கின்றேன், ஏனெனில் என் சிந்தனையாலும், சொல்லாலும் செயலாலும் கடமையில் தவறியதாலும் பாவங்கள் பல செய்தேன். (மார்பில்தட்டிக்கொண்டு) என் பாவமே, என் பாவமே, என் பெரும் பாவமே. ஆகையால் எப்போதும் கன்னியான புனித மரியாவையும், வானதூதர், புனிதர் அனைவரையும் சகோதர சகோதரிகளே உங்களையும் நம் இறைவனாகிய ஆண்டவரிடம் எனக்காக வேண்டிக்கொள்ள மன்றாடுகின்றேன்.
 அ.ப.: எல்லாம் வல்ல இறைவன் நம்மீது இரக்கம் வைத்து, நம் பாவங்களை மன்னித்து, நம்மை நிலை வாழ்வுக்கு அழைத்துச் செல்வாராக.
அ.ப.: உள்ளம் நொறுங்கி வருந்துவோரை நமலமாக்க அனுப்பப்பெற்ற ஆண்டவரே, இரக்கமாயிரும்.
எல்.: ஆண்டவரே, இரக்கமாயிரும்.
அ.ப.: பாவிகளைத் தேடி வந்த கிறிஸ்துவே, இரக்கமாயிரும்.
எல்.: கிறிஸ்துவே, இரக்கமாயிரும்.
அ.ப.: தந்தையின் வலப்பக்கம் வீட்றிருந்து, எங்களுக்காக பரிந்து பேசுகின்ற ஆண்டவரே, இரக்கமாயிரும்.
எல்.: ஆண்டவரே, இரக்கமாயிரும்
நம்பிக்கைஅறிக்கை
  ஒரே கடவுளை நம்புகின்றேன்.
  விண்ணகமும் மண்ணகமும், காண்பவை காணாதவை யாவும் படைத்த எல்லாம் வல்ல தந்தை அவரே.
  கடவுளின் ஒரே மகனாய் உதித்த ஒரே ஆண்டவர் இயேசு கிறிஸ்துவை நம்புகின்றேன்.
  இவர் காலங்களுக்கெல்லாம் முன்பே தந்தையிடமிருந்து பிறந்தார்
  கடவுளினின்று கடவுளாக, ஒளியினின்று ஒளியாக,
  உண்மைக் கடவுளினின்று
  உண்மைக் கடவுளாக உதித்தவர்.
  இவர் உதித்தவர், உண்டாகப்பட்டவர் அல்லர்.
  தந்தையோடு ஒரே பொருளானவர்
  இவர் வழியாகவே யாவும் படைக்கப்பட்டன.
  மனிதர் நமக்காகவும் நம் மீட்புக்காகவும் விண்ணகம் இருந்து இறங்கினார்.
  (“….மனிதர்ஆனார்” எனச்சொல்லும்வரைஎல்லாரும்தலைவணங்கவும்)
  தூய ஆவியால் கன்னி மரியாவிடம் உடல் எடுத்து மனிதர் ஆனார்.
  மேலும் நமக்காகப் பொந்தியு பிலாத்தின் அதிகாரத்தில் சிலுவையில் அறையப்பட்டுப் பாடுபட்டு, இறந்து அடக்கம் செய்யப்பட்டார்.
  மறைநூல்களின்படி மூன்றாம் நாள்
  உயிர்த்தெழுந்தார்.
  விண்ணகத்துக்கு எழுந்தருளி எல்லாம் வல்ல தந்தையின் வலப் பக்கம் வீற்றிருக்கின்றார்.
  வாழ்வோரையும் இறந்தோரையும் தீர்ப்பிட மாட்சியுடன் மீண்டும் வர இருக்கின்றார்.
  அவரது ஆட்சிக்கு முடிவு இராது.
  தந்தையிடமிருந்தும் மகனிடமிருந்தும் புறப்படும் ஆண்டவரும் உயிர் அளிப்பவருமானதூய ஆவியாரை நம்புகின்றேன்.
  இவர் தந்தையோடும் மகனோடும் ஒன்றாக ஆராதனையும் மாட்சியும் பெறுகின்றார்.
  இறைவாக்கினர்கள் வாயிலாகப் பேசியவர் இவரே.
  ஒரே, புனித, கத்தோலிக்க, திருத்தூதர் வழிவரும் திரு அவையை நம்புகின்றேன்.
  பாவ மன்னிப்புக்கான ஒரே திருமுழுக்கை
  ஏற்றுக் கொள்கின்றேன்.
  இறந்தோரின் உயிர்ப்பையும்
  வரவிருக்கும் மறு உலக வாழ்வையும்
  எதிர்பார்க்கின்றேன். ஆமென்.
நற்கருணைவழிபாடு
காணிக்கைப்பாடல்
அ.ப.: சகோதர சகோதரிகளே, என்னுடையதும் உங்களுடையதுமான இப்பலி எல்லாம் வல்ல தந்தையாகிய இறைவனுக்கு ஏற்றதாகும்படி மன்றாடுங்கள்
எல்.: ஆண்டவர் தமது பெயரின் புகழ்ச்சிக்காகவும், மாட்சிக்காகவும் நமது நன்மைக்காகவும், புனிதத் திரு அவை அனைத்தின் நலனுக்காகவும் உமது
  கையிலிருந்து இப்பலியை ஏற்றுக்கொள்வராக.
(அருள்பணியாளர் காணிக்கை மீது மன்றாட்டைச்
  சொல்கின்றார். அதன் முடிவில்)
எல்.: ஆமென்
நற்கருணைமன்றாட்டு
அ.ப.: ஆண்டவர் உங்களோடு இருப்பாராக
எல்.: உம் ஆன்மாவோடும் இருப்பாராக
அ.ப.: இதயங்களை மேலே எழுப்புங்கள்
எல்.: ஆண்டவரிடம் எழுப்பியுள்ளோம்
அ.ப.: நம் இறைவனாகிய ஆண்டவருக்கு நன்றி கூறுவோம்
எல்.: அது தகுதியும் நீதியும் ஆனதே
ஆண்டவரே தூயவரான தந்தையே என்றுமுள்ள எல்லாம் வல்ல இறைவா  எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக எந்நாளும் எவ்விடத்திலும்
  நாங்கள் உமக்கு நன்றி செலுத்துவது மெய்யாகவே தகுதியும் நீதியுமாகும் எங்கள் கடமையும் மீட்புக்கு உரிய செயலுமாகும்.
என்றுமுள்ள மெய்யான குருவாகிய அவர் நிலையான பலிமுறையை ஏற்படுத்தினார். மீட்பு அளிக்கும் பலிப்பொருளாக முதன் முதல் தம்மையே உமக்கு ஒப்புக்கொடுத்து, தம் நினைவாக நாங்களும் பலிசெலுத்த வேண்டுமென்று கற்பித்தார். எங்களுக்காகப் பலியான அவருடைய திருஉடலை
  உண்ணும்போதெல்லாம் நாங்கள் வலிமை பெறுகின்றோம். அவர் எங்களுக்காகச் சிந்திய திருஇரத்தத்தைப் பருகும் போதெல்லாம் நாங்கள் கழுவப்பட்டுத் தூய்மை அடைகின்றோம்.
ஆகவே வானதூதர் முதன்மை வானதூதரோடும் அரியணையில் அமர்வோர் தலைமை தாங்குவோரோடும் வான்படைகளின் அணிகள் அனைத்தோடும் சேர்ந்து
  நாங்கள் உமது மாட்சியைப் புகழ்ந்து பாடி முடிவின்றிச் சொல்வதாவது (தொடக்கவுரையைத்தொடர்ந்துதூயவர்இடம்பெறும்)
தூயவர், தூயவர், தூயவர் – வான் படைகளின் கடவுளாம் ஆண்டவர்.
  விண்ணகமும் மண்ணகமும் உமது மாட்சியால் நிறைந்துள்ளன.
  உன்னதங்களிலே ஓசன்னா – 2 ஆண்டவர் பெயரால் வருகிறவர் ஆசி பெற்றவர்
  உன்னதங்களிலே ஓசன்னா – 2
(அர்ச்சிப்புப் பகுதிக்குப் பின்)
அ.ப.: நம்பிக்கையின் மறைபொருள்
எல்.: ஆண்டவரே, நீர் வருமளவும் உமது இறப்பினை அறிக்கையிடுகின்றோம். உமது உயிர்ப்பினையும் எடுத்துரைக்கின்றோம்.
இவர் வழிகாக இவரோடு இவரில், எல்லாம் வல்ல இறைவனாகிய தந்தையே தூய ஆவியாரின் ஒன்றிப்பில் எல்லா புகழும் மாட்சியும் என்றென்றும் உமக்கு உரியதே 
எல்.: ஆமென்
  அ.ப.:மீட்பரின் கட்டளையால் கற்பிக்கப்பட்டு இறைப்படிப்பினையால் பயிற்சி பெற்ற நாம் துணிந்து சொல்வோம்
எல்.: விண்ணுலகில் இருக்கின்ற எங்கள் தந்தையே, உமது பெயர் தூயது எனப் போற்றப்பெறுக உமது ஆட்சி வருக உமது திருவுளம் விண்ணுலகில் நிறைவேறுவது போல, மண்ணுலகிலும் நிறைவேறுக எங்கள் அன்றாட உணவை இன்று எங்களுக்குத் தாரும். எங்களுக்கு எதிராகக் குற்றம் செய்வோரை
  நாங்கள் மன்னிப்பது போல, எங்கள் குற்றங்களை மன்னியும், எங்களைச் சோதனைக்கு உட்படுத்தாதேயும் தீமையிலிருந்து எங்களை விடுவித்தருளும்.
அ.ப.: ஆண்டவரே, தீமை அனைத்திலிருந்தும் எங்களை விடுவித்து எங்கள் வாழ்நாளி்ல் அமைதியைக் கனிவுடன் அருள உம்மை மன்றாடுகின்றோம். உமது இரக்கத்தின் உதவியால் நாங்கள் பாவத்திலிருந்து எப்போதும் விடுதலை பெற்று, யாதொரு கலக்கமும் இன்றி நலமாய் இருப்போமாக. நாங்கள் எதிர்நோக்கியிருக்கும் பேரின்பத்துக்காகவும் எம் மீட்பராகிய இயேசு கிறில்துவின் வருகைக்காகவும் காத்திருக்கின்றோம்.
எல்.: ஏனெனில் ஆட்சியும் வல்லமையும் மாட்சியும் என்றென்றும் உமதே
அ.ப.: ஆண்டவரே, இயேசு கிறிஸ்துவே, “அமைதியை உங்களுக்கு விட்டுச் செல்கின்றேன். என் அமைதியையே உங்களுக்கு அளிக்கிறேன்” என்று உம் திருத்தூதர்களுக்கு மொழிந்தீரே; எங்கள் பாவங்களைப் பாராமல் உமது திருஅவையின் நம்பிக்கையைக் கண்ணோக்கி, உம் திருவுளத்துக்கு ஏற்ப அதற்கு அமைதியையும் ஒற்றுமையையும் அளித்தருள்வீராக. என்றென்றும் வாழ்ந்து ஆட்சி
  செய்கின்றவர் நீரே.
எல்.: ஆமென்
அ.ப.: ஆண்டவருடைய அமைதி உங்களோடு என்றும் இருப்பதாக
எல்.: உம் ஆன்மாவோடும் இருப்பதாக
அ.ப.: ஒருவருக்கொருவர் அமைதியைப் பகிர்ந்து கொள்வோம்
எல்.: உலகின் பாவங்களைப் போக்கும்
இறைவனின் செம்மறியே எங்கள் மேல் இரக்கமாயிரும் உலகின் பாவங்களைப் போக்கும் இறைவனின் செம்மறியே, எங்கள் மேல் இரக்கமாயிரும் உலகின் பாவங்களைப் போக்கும் இறைவனின் செம்மறியே எங்களுக்கு அமைதியை அளித்தருளும்
அ.ப.: இதோ, இறைவனின் செம்மறி, இதோ, உலகின் பாவங்களைப் போக்குபவர். செம்மறியின் விருந்துக்கு அழைக்கப் பெற்றோர் பேறுபெற்றோர்.
எல்.: ஆண்டவரே, நீர் என் இல்லத்தில் எழுந்தருள நான் தகுதியற்றவர், ஆனால் ஒரு வார்த்தை மட்டும் சொல்லியருளும், எனது ஆன்மா நலம் அடையும்.
அ.ப.: ஆண்டவர் உங்களோடு இருப்பாராக
எல்.: உம் ஆன்மாவோடும் இருப்பாராக
அ.ப.: எல்லாம் வல்ல இறைவன், தந்தை, மகன், தூய ஆவியார் உங்களுக்கு ஆசி வழங்குவாராக
எல்.: ஆமென்
அ.ப.: சென்று வாருங்கள் திருப்பலி நிறைவேறிற்று
எல்.: இறைவனுக்கு நன்றி


திருச்செபமாலை

செபமாலைத்  தியானம்

தந்தை,  மகன்,  தூய ஆவியாரின்  பெயராலே,  ஆமென்.
 
தூய  ஆவியானவரை  நோக்கிச்  செபம்:  தூய  ஆவியானவரே!  எழுந்தருளி  வாரும்.  வானிலிருந்து  உம்முடைய  அருட்சுடரின்  கதிர்களை  வரவிடும்.  எளியோரின்  தந்தையே!  கொடைகளைக்  கொடுக்கின்றவரே!  இதயங்களின்  வெளிச்சமே!  எழுந்தருளி  வாரும்.  உன்னத  ஆறுதலானவரே!  ஆன்மாவின் இனிய விருந்தினரே!  பேரின்பம்தரும் இளைப்பாற்றியே! உழைப்பின் களைப்பைத் தீர்ப்பவரே,   வெம்மை தணிக்கும் குளிர்நிழலே, அழுகையில் தேற்றரவே!  எழுந்தருளி வாரும்.  உன்னத மகிழ்ச்சியின் பேரொளியே!  உம்மை  நம்புவோரின்  இதயங்களை  நிரப்பும். உம்முடைய அருளாற்றல் இல்லாமல் மனிதரிடத்தில்  நன்மையானது  ஒன்றுமில்லை.  கறையுள்ளதைச்  சுத்தம் பண்ணும்.  உலர்ந்துபோனதை நனையும்.  காயங்களைக் குணமாக்கும். வணங்காததை வணங்கச்செய்யும்.  குளிரோடிப்பதை குளிர்போக்கும்.  தவறிப்போனதைச்  செவ்வனே  நடத்தும்.  உம்மை  நம்புகின்ற உம்  அடியார்களுக்கு  உம்  திருக்கொடைகள்  ஏழும்  தந்தருளும்.  புண்ணிய  பேறுகளையும்,  அமைதிநிறை  இறப்பினையும்,  நிலையான  விண்ணக  மகிழ்ச்சியையும்  எங்களுக்குத்  தந்தருளும்,   ஆமென்.
 
மன்றாடுவோமாக:  அனைத்து  நன்மைகளும்  நிறைந்திருக்கும்  அன்பின்  ஆண்டவரே, தீய  மனிதரும்  நன்றியில்லாத  பவிகளுமாயிருக்கும் அடியோர் நாங்கள், அளவில்லா மாட்சி கொண்டிருக்கும் இறைவன் உம் திருச்சந்நிதியிலேயிருந்து  செபம்  செய்யத்தகுதி  அற்றவர்களாய்  இருந்தாலும்,  உம்முடைய  அளவில்லாத  இரக்கத்தை  நம்பிக்கொண்டு,  உமது  மாட்சிக்காகவும்  அன்னை  மரியாவின்  புகழ்ச்சிக்காகவும்  ஐம்பத்துமூன்று  மணிச்செபமாலை  தொடுக்க  ஆசையாய்  இருக்கிறோம்.  இந்தச்  செபத்தைப் பக்தியோடுசெய்து பராக்கில்லாமல் முடிக்க உமதருளை  எங்களுக்குத்  தந்தருளும்  -  ஆமென்.
 
நம்பிக்கை  அறிக்கை:  விண்ணகத்தையும்  மண்ணகத்தையும்  படைத்த  எல்லாம்வல்ல  தந்தையாகிய  கடவுளை நம்புகின்றேன். அவருடைய ஒரே மகனாகிய நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவையும் நம்புகின்றேன். இவர் தூய ஆவியாரால்  கருவுற்று  புனித  கன்னிமரியாவிடமிருந்து  பிறந்தார்.  பொந்தியு  பிலாத்தின்  அதிகாரத்தில்  பாடுபட்டு சிலுவையில் அறையப்பட்டு இறந்து, அடக்கம் செய்யப்பட்டார். பாதாளத்தில் இறங்கி மூன்றாம் நாள் இறந்தோரிடமிருந்து உயிர்த்தெழுந்தார். விண்ணகத்திற்கு  எழுந்தருளி  எல்லாம் வல்ல தந்தையாகிய கடவுளின் வலப்பக்கத்தில் வீற்றிருக்கின்றார்.  அவ்விடத்திலிருந்து வாழ்வோருக்கும் இறந்தோருக்கும் தீர்ப்பு வழங்க மீண்டும் வருவார்.    தூய  ஆவியாரை  நம்புகின்றேன்.   
தூய  கத்தோலிக்கத்  திரு அவையையும்  புனிதர்களுடைய  சமூக உறவையும்  நம்புகின்றேன்.  பாவ மன்னிப்பை  நம்புகின்றேன்.    உடலின்  உயிர்ப்பை  நம்புகின்றேன்.  நிலை வாழ்வை  நம்புகின்றேன்.  –  ஆமென்.
 
 
விண்ணுலகில்  இருக்கிற  எங்கள்  தந்தையே!  உமது  பெயர்  தூயது  எனப்  போற்றப்  பெறுக,   உமது  ஆட்சி  வருக.  உமது  திருவுளம்  விண்ணுலகில்  நிறைவேறுவதுபோல  மண்ணுலகிலும்  நிறைவேறுக.
எங்கள் அன்றாட  உணவை  இன்று  எங்களுக்குத்  தாரும்.  எங்களுக்கு  எதிராகக்  குற்றம்  செய்வோரை  நாங்கள்  மன்னிப்பதுபோல  எங்கள்  குற்றங்களை  மன்னியும்.  எங்களைச்  சோதனையில்  விழவிடாதேயும்,  தீமையிலிருந்து  எங்களை  விடுவித்தருளும்  -  ஆமென்.
 
அருள்நிறை  மரியே  வாழ்க!  ஆண்டவர்  உம்முடனே.  பெண்களுள்  ஆசி  பெற்றவர்  நீரே.  உம்முடைய  திருவயிற்றின்  கனியாகிய  இயேசுவும்  ஆசி  பெற்றவரே,
புனித  மரியே,  இறைவனின்  தாயே,  பாவிகளாயிருக்கிற  எங்களுக்காக,  இப்பொழுதும்  எங்கள்  இறப்பின்  வேளையிலும்  வேண்டிக்கொள்ளும்  -  ஆமென்.
 
தந்தைக்கும்,  மகனுக்கும்,  தூய  ஆவியாருக்கும்  மாட்சி  உண்டாவதாக!  தொடக்கத்திலே  இருந்ததுபோல  இப்பொழுதும்  எப்பொழுதும்  என்றென்றும்  இருப்பதாக   --  ஆமென்.
 
ஓ  என்  இயேசுவே,   எங்கள்  பாவங்களைப்  பொறுத்தருளும்.  எங்களை  நரக  நெருப்பிலிருந்து  மீட்டருளும்.  சகல  ஆன்மாக்களையும்  விண்ணுலக  பாதையின்வழி  நடத்தியருளும்.        உமது  இரக்கம்  அதிகமாக  வேண்டியவர்களுக்கு  சிறப்பான  உதவி  புரிந்தருளும்.

• மாட்சிநிறை  மறை  நிகழ்ச்சிகள் 

1 - இயேசுவின்  உயிர்ப்பு
2 - இயேசுவின்  விண்ணேற்றம்
3 - தூயஆவியாரின்  வருகை
4 – இறையன்னையின் விண்ணேற்பு
5 - இறையன்னைக்கு  முடிசூடுதல் 


 

காணிக்கைச்  செபம்:   அதிசிறந்த  மாட்சியுள்ள  விண்ணக  மண்ணக  அரசியான  புனித  மரியன்னையே!  நாங்கள்  உம்;முடைய  திருப்பாதத்தை  வணங்கி  இந்;தச்  செபமாலைத்  தியானத்தை  உமக்குப்  பாதகாணிக்கையாக வைத்து  ஒப்புக்கொடுக்கின்றோம்.  இதை  நீர் கையேற்று  உம்  திருமகனிடத்திலே  கையளித்து,  இதிலே  நாங்கள்  தியானித்த தூய  மறையுண்மைகளின்  பலனை  அடையவும்,  இறைபோதனையின்படியே  நாங்கள்  நடந்து  இவ்வுலகத்தின்  அனைத்து  தீமைகளுக்கும்  நிவாரணமாகவும்;  விண்ணகத்தில்  உம்மோடு  உம்முடைய  திருமகனுடைய  விண்ணகத்  திருவடிவைக்கண்டு  களிகூர்ந்திருக்கவும்  ஒத்தாசை  செய்தருளும்  தாயாரே   -   ஆமென்.
 
புனித  மரியாள்,  இறையன்னை  மன்றாட்டுமாலை
ஆண்டவரே  இரக்கமாயிரும் --  ஆண்டவரே  இரக்கமாயிரும்
கிறிஸ்துவே  இரக்கமாயிரும்  --   கிறிஸ்துவே  இரக்கமாயிரும்
ஆண்டவரே  இரக்கமாயிரும் --  ஆண்டவரே  இரக்கமாயிரும்
கிறிஸ்துவே  எங்கள்  மன்றாட்டைக்  கேட்டருளும்
 - கிறிஸ்துவே எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்
கிறிஸ்துவே  எங்கள்  மன்றாட்டைக்  கனிவாய்க்  கேட்டருளும்
 - கிறிஸ்துவே எங்கள் மன்றாட்டைக் கனிவாய்க் கேட்டருளும்
 
விண்ணகத்திலிருக்கிற  தந்தையாகிய  இறைவா -
எங்கள்மேல் இரக்கமாயிரும் ஆண்டவரே
உலகத்தை  மீட்ட  மகனாகிய  இறைவா –
      எங்கள்மேல் இரக்கமாயிரும் ஆண்டவரே
தூய  ஆவியாராகிய  இறைவா   
 -   எங்கள்மேல் இரக்கமாயிரும் ஆண்டவரே
தூய்மைநிறை  மூவொரு இறைவா
 -   எங்கள்மேல் இரக்கமாயிரும் ஆண்டவரே
 
புனித  மரியாயே    எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்
இறைவனின்  புனித  தாயாரே    எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்
கன்னியருள்  உத்தம  கன்னிகையே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்
கிறிஸ்துவினுடைய  தாயாரே    எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்
திரு அவையின்  தாயாரே    எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்
இரக்கத்தின்  தாயாரே    எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்
இறையருளின்  தாயாரே        எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்
எதிர்நோக்கின்  தாயாரே         எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்
நிறை  தூய்மையுள்ள  தாயாரே    எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்
கற்பு  நிறைந்த  தாயாரே  எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்
குறைவில்லா  கன்னிமைகொண்ட தாயாரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்
கன்னித்  தூய்மை  கெடாத  தாயாரே  எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்
பேரன்புநிறை  தாயாரே  –  எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்
ஆச்சரியத்துக்குரிய  தாயாரே  –  எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்
நல்ல  ஆலோசனையின்  தாயாரே  எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்
படைக்கும்  கடவுளது  தாயாரே – எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்
மீட்பரினுடைய  தாயாரே – எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்
பேரறிவுள்ள  கன்னிகையே  –  எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்
பெரும்  வணக்கத்துக்குரிய  கன்னிகையே  –  எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்
பெரும்  புகழ்ச்சிக்குரிய  கன்னிகையே  -  எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்
சக்தியுடையவளாயிருக்கிற  கன்னிகையே  –  எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்
இரக்கம்நிறை  கன்னிகையே  –  எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்
நிறைநம்பிக்கையின்  கன்னிகையே  –  எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்
நீதியினுடைய  கண்ணாடியே  –  எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்
ஞானத்திற்கு  இருப்பிடமே  –  எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்
எங்கள்  மகிழ்ச்சியின்  காரணமே  –  எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்
ஞான  பாத்திரமே  –  எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்
மாட்சிக்குரிய  பாத்திரமே  –  எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்
அதிசிறந்த  பக்தியுள்ள  பாத்திரமே  –  எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்
மறைபொருளைக்  கொண்டிருக்கிற  ரோசா  மலரே –  எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்
தாவீது  அரசருடைய  கோபுரமே  –  எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்
தந்த  மயமாயிருக்கிற  கோபுரமே  –  எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்
பொன்  மயமாயிருக்கிற  ஆலயமே  –  எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்
உடன்படிக்கையின்  பேழையே  –  எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்
விண்ணகத்தின்  வாசலே –  எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்
விடியற்காலத்தின்  விண்வெள்ளியே  –  எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்
நோயாளிகளுக்கு  நற்சுகமே  –  எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்
பாவிகளுக்கு  அடைக்கலமே  –  எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்
புலம்பெயர்வோரின்  ஆறுதலே – எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்
வருந்துவோருக்குத்  தேற்றரவே  –  எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்
கிறிஸ்தவர்களின்  சகாயமே  –  எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்
வானதூதர்களின்  அரசியே  –  எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்
முதுபெரும்  தந்தையரின்  அரசியே  –  எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்
இறைவாக்கினரின்  அரசியே  –  எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்
திருத்தூதர்களின்  அரசியே  –  எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்
மறைசாட்சிகளின்  அரசியே  –  எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்
தூயவர்களின்  அரசியே  –  எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்
கன்னியர்களின்  அரசியே  –  எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்
பிறப்புநிலைப் பாவமின்றி  உற்பவித்த  அரசியே  –  எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்
விண்ணகத்திற்கு  எடுத்துக்கொள்ளப்பட்ட  அரசியே  –  எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்
திருச்செபமாலையின்  அரசியே  –  எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்
அமைதியின்  அரசியே  –  எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்
குடும்பங்களின்  அரசியே  –  எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்
 
உலகின்  பாவங்களைப்  போக்கும்  இறைவனின்  செம்மறியாகிய  இயேசுவே     - எங்கள் பாவங்களைப் பொறுத்தருளும் ஆண்டவரே
 
உலகின்  பாவங்களைப்  போக்கும்  இறைவனின்  செம்மறியாகிய  இயேசுவே  -  எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும் ஆண்டவரே
 
உலகின்  பாவங்களைப்  போக்கும்  இறைவனின்  செம்மறியாகிய  இயேசுவே -  எங்கள்மேல்  இரக்கமாயிரும் ஆண்டவரே
 
இயேசு  கிறிஸ்துவினுடைய  வாக்குறுதிகளுக்கு  நாங்கள்  தகுதியுள்ளவர்களாய்  இருக்கத்தக்கதாக
 - இறைவனின் புனித அன்னையே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்
 
மன்றாடுவோமாக: ஆண்டவராகிய இறைவா, முழுமனதுடனே தெண்டணாக விழுந்து கிடக்கும் இந்தக் குடும்பத்தைப் பார்த்து, எப்பொழுதும் புனித கன்னிகையான விண்ணக பேறுபெற்ற மரியாவினுடைய  வேண்டுதலினால்,  அனைத்து  தீமையின்  தாக்குதல்களில்  இருந்தும்  எங்களைக்  காத்தருளும்.  இந்த  மன்றாட்டுக்களை  எல்லாம்  எங்கள்  ஆண்டவராகிய  இயேசு கிறிஸ்துவினுடைய  திருமுகத்தைப்  பார்த்து  எங்களுக்குத்  தந்தருளும் --  ஆமென்.
 

கிருபை  தயாபத்துச்  செபம்:    அருளிரக்கத்தின்  அன்னையாயிருக்கும்,  எங்கள் அரசியே,  எங்கள்  வாழ்வே,  எங்கள்  இனிமையே,  எங்கள் தஞ்சமே வாழ்க!  தாயகமிழந்த  ஏவாளின்  பிள்ளைகள்  நாங்கள்,  தாயே  என்று  உம்மையே கூப்பிடுகின்றோம். இந்தக் கண்ணீர்ப் பள்ளத்தாக்கில் இருந்துகொண்டு  உம்மை நோக்கிப்  பெருமூச்சு  விடுகின்றோம். ஆதலால் எங்களுக்காக வேண்டிமன்றாடுகிற தாயே, இரக்கம்மிகு உம் திருகண்களை எம்மை நோக்கித்திருப்பியருளும்.  அத்தோடுகூட, நாங்கள் இப்பூவுலகைக்  கடந்தபின்பு,  உம்முடைய  திருவயிற்றின்  கனியாகிய  இயேசுவினுடைய  தூயவடிவை முகம்முகமாய்க் காணும் வரத்தை எங்களுக்குப் பெற்றுத்தந்தருளும். கருணையின் உருவே,  தாய்மையின்  நிறைவே,  இனிமையின்  வடிவே,  இறைவனின்  தாயே  உம்மையே  மன்றாடுகின்றோம் – ஆமென்.
 
இறுதி வேண்டுதல்:  ஆண்டவரே,  இந்த  ஆராதனையெல்லாம்  இறைவன்  உம்  திருவுளத்திற்கு  ஏற்றவையாய்  இருக்கவும்  எங்களுக்கும் முழுத் திரு அவைக்கும்  பலனளித்திடவும்  அருள்புரிந்தருளும்.  உம்மைப்  பின்பற்றும்  நாடுகளில் நல்லமைதி  நிலைத்திடவும்,  உம்மை  நம்பாதோர்  ஞானவெளிச்சம்  கண்டிடவும்,  இறை ஊழியர்கள்  ஆர்வம் பெற்றிடவும்,  பாவிகள் தம் பாவத்தைக் களைந்திடவும்,  பிறரன்புப்  பணிபுரிவோர்  பணியூக்கம் கொண்டிடவும்,  இறப்பின்வலியில் வருந்துவோர் ஈடேற்றம் பெற்றிடவும், இவ்விடத்திலுள்ள அனைத்து கிறிஸ்தவர்களுக்கும் குருமாருக்கும்  தீமையில்லாமல்  திரு அவை  வளர்ந்திடவும்,   நாங்கள்  அனைவரும்  பாவமின்றி  நடந்து  விண்ணகப்  பேற்றினை  அடைந்திடவும்  உம்மை  மன்றாடுகின்றோம்.  இவற்றையெல்லாம்  எங்கள்  ஆண்டவர்  இயேசு  கிறிஸ்து  வழியாகப்  பெற்றிடச்  செய்தருளும்    ஆமென்.