திகதி : 2025-07-17
திருவழிபாட்டுக்காலம்
பொதுக்காலம்
திருவழிபாட்டு வாரம்
15ஆம் வாரம் - வியாழன்
இன்றைய புனிதர்
உரோம் நாட்டின் புனித அலெக்சிஸ்
நாள் வாசகங்கள்
முதலாம் வாசகம்: விடுதலைப் பயண நூலிலிருந்து வாசகம் 3: 13-20
திருப்பாடல் : திபா 105: 1,5. 8-9. 24-25. 26-27 (பல்லவி: 8a)
நற்செய்தி வாசகம் : ✠ மத்தேயு எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 11: 28-30
Sacred Reading Texts:
பொதுக்காலம் 15ஆம் வாரம் - வியாழன்
முதல் வாசகம்
‘இருக்கின்றவர் நானே’ என்பவர் என்னை உங்களிடம் அனுப்பினார்.
விடுதலைப் பயண நூலிலிருந்து வாசகம் 3: 13-20
அந்நாள்களில்
மோசே கடவுளிடம், “இதோ! இஸ்ரயேல் மக்களிடம் சென்று உங்கள் மூதாதையரின் கடவுள் என்னை உங்களிடம் அனுப்பியுள்ளார் என்று நான் சொல்ல, ‘அவர் பெயர் என்ன?’ என்று அவர்கள் என்னை வினவினால், அவர்களுக்கு என்ன சொல்வேன்?” என்று கேட்டார். கடவுள் மோசேயை நோக்கி, ‘இருக்கின்றவராக இருக்கின்றவர் நானே’ என்றார். மேலும் அவர், “நீ இஸ்ரயேல் மக்களிடம், ‘இருக்கின்றவர் நானே’ என்பவர் என்னை உங்களிடம் அனுப்பினார் என்று சொல்” என்றார்.
கடவுள் மீண்டும் மோசேயை நோக்கிப் பின்வருமாறு கூறினார்: “நீ இஸ்ரயேல் மக்களிடம், ‘உங்கள் மூதாதையரின் கடவுளாகிய ஆண்டவர் - ஆபிரகாமின் கடவுள், ஈசாக்கின் கடவுள், யாக்கோபின் கடவுள் - என்னை உங்களிடம் அனுப்பியுள்ளார்’ என்று சொல். இதுவே என்றென்றும் என் பெயர்; தலைமுறை தலைமுறையாக என் நினைவுச் சின்னமும் இதுவே!
போ. இஸ்ரயேலின் பெரியோர்களை ஒன்றுதிரட்டி அவர்களை நோக்கி, ‘உங்கள் மூதாதையரின் கடவுளாகிய ஆண்டவர் - ஆபிரகாமின் கடவுள், ஈசாக்கின் கடவுள், யாக்கோபின் கடவுள் - எனக்குக் காட்சியளித்து இவ்வாறு கூறினார்: உங்களையும், எகிப்தில் உங்களுக்கு நேரிட்டதையும் நான் கண்ணாலே கண்டுகொண்டேன். எகிப்தின் கொடுமையிலிருந்து கானானியர், இத்தியர், எமோரியர், பெரிசியர், இவ்வியர், எபூசியர் வாழும் நாட்டிற்கு - பாலும், தேனும் பொழியும் நாட்டிற்கு - உங்களை நடத்திச் செல்வேன்’ என்று அறிவிப்பாய். அவர்கள் நீ சொல்வதைக் கேட்பர். நீயும் இஸ்ரயேலின் பெரியோர்களும் எகிப்திய மன்னனிடம் செல்லுங்கள். அவனை நோக்கி, ‘எபிரேயரின் கடவுளாகிய ஆண்டவர் எங்களைச் சந்தித்தார். இப்போதே நாங்கள் பாலை நிலத்தில் மூன்று நாள் வழிப்பயணம் போக இசைவு தாரும். ஏனெனில், எங்கள் கடவுளாகிய ஆண்டவருக்குப் பலிசெலுத்த வேண்டும்’ என்று சொல்லுங்கள்.
என் கைவன்மையைக் கண்டாலன்றி, எகிப்திய மன்னன் உங்களைப் போகவிடமாட்டான் என்பது எனக்குத் தெரியும். எனவே என் கையை ஓங்குவேன். நான் செய்யப்போகும் அனைத்து அருஞ்செயல்களாலும் எகிப்தியனைத் தண்டிப்பேன். அதற்குப் பின் அவன் உங்களை அனுப்பிவிடுவான்.”
ஆண்டவரின் அருள்வாக்கு.
பதிலுரைப் பாடல்
திபா 105: 1,5. 8-9. 24-25. 26-27 (பல்லவி: 8a)
பல்லவி: ஆண்டவர் தமது உடன்படிக்கையை என்றென்றும் நினைவில் கொள்கின்றார்.
அல்லது: அல்லேலூயா.
1
ஆண்டவருக்கு நன்றி செலுத்துங்கள்! அவர்தம் பெயரைச் சொல்லி வழிபடுங்கள்! அவர்தம் செயல்களை மக்களினங்கள் அறியச் செய்யுங்கள்.
5
அவர் செய்த வியத்தகு செயல்களை நினைவுகூருங்கள்! அவர்தம் அருஞ்செயல்களையும், அவரது வாய் மொழிந்த நீதித் தீர்ப்புகளையும் நினைவில் கொள்ளுங்கள். - பல்லவி
8
அவர் தமது உடன்படிக்கையை என்றென்றும் நினைவில் கொள்கின்றார்; ஆயிரம் தலைமுறைக்கென தாம் அளித்த வாக்குறுதியை நினைவுகூர்கின்றார்.
9
ஆபிரகாமுடன் தாம் செய்துகொண்ட உடன்படிக்கையையும் ஈசாக்குக்குத் தாம் ஆணையிட்டுக் கூறியதையும் அவர் நினைவில் கொண்டுள்ளார். - பல்லவி
24
ஆண்டவர் தம் மக்களைப் பல்கிப் பெருகச் செய்தார்; அவர்களின் எதிரிகளைவிட அவர்களை வலிமைமிக்கவர்கள் ஆக்கினார்.
25
தம் மக்களை வெறுக்கும்படியும், தம் அடியார்களுக்கு எதிராகச் சூழ்ச்சி செய்யும்படியும் அவர் எகிப்தியரின் மனத்தை மாற்றினார். - பல்லவி
26
அவர் தம் ஊழியராகிய மோசேயையும், தாம் தேர்ந்தெடுத்த ஆரோனையும் அனுப்பினார்.
27
அவர்கள் எகிப்தியரிடையே அவர்தம் அருஞ்செயல்களைச் செய்தனர்; காம் நாட்டில் வியத்தகு செயல்களைச் செய்து காட்டினர். - பல்லவி
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
மத் 11: 28
அல்லேலூயா, அல்லேலூயா! பெருஞ்சுமை சுமந்து சோர்ந்திருப்பவர்களே, எல்லாரும் என்னிடம் வாருங்கள், நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன், என்கிறார் ஆண்டவர். அல்லேலூயா.
நற்செய்தி வாசகம்
நான் கனிவும் மனத்தாழ்மையும் உடையவன்.
✠ மத்தேயு எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 11: 28-30
அக்காலத்தில்
இயேசு கூறியது: “பெருஞ்சுமை சுமந்து சோர்ந்திருப்பவர்களே, எல்லாரும் என்னிடம் வாருங்கள். நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன். நான் கனிவும் மனத் தாழ்மையும் உடையவன். ஆகவே என் நுகத்தை உங்கள்மேல் ஏற்றுக்கொண்டு என்னிடம் கற்றுக்கொள்ளுங்கள். அப்பொழுது உங்கள் உள்ளத்திற்கு இளைப்பாறுதல் கிடைக்கும். ஆம், என் நுகம் அழுத்தாது; என் சுமை எளிதாயுள்ளது” என்றார்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
புனிதரின் வரலாறு
உரோம் நாட்டின் புனித அலெக்சிஸ்
குணமாக்குதலும் உதவுதலும்
திருப்பயணியர் மற்றும் பிச்சைக்காரர்களின் காவலர்
அலெக்ஸிஸ் என்பவர் அலெக்ஸியஸ் மற்றும் அலெசியோ என்றும் அழைக்கப்பட்டவர் உரோமை நகரிலுள்ள உயர்குடும்ப பெற்றோருக்கு ஒரே மகன். சிறுவயதிலிருந்தே அலெக்சிஸ் மதப்பற்று மிக்கவராக இருந்தார். ஓர் அரசிளங்குமரிக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டு, அவரை ஆடம்பரமாகத் திருமணம் செய்து கொண்டார். திருமணம் நடைபெற்ற அந்த இரவில் அலெக்ஸின் மனைவி அவரை விடுவிக்க மனிமிசைந்தார். அவர் இரகசியமாக தனது தந்தை வீட்டிலிருந்து விடுவித்துக் கொண்டு சிரியாவுக்கு கால்நடையாகச் சென்றடைந்தார். அவர் அங்கு குடியேறி ஒரு பிச்சைக்காரராக, எடிசா மாதா கோவிலிலருகில், ஒரு குடிசையில் 17 ஆண்டுகளாக வாழ்ந்து வந்தார். அந்த நேர்மையான கிறிஸ்தவர் தனக்குத் தேவையானதை மட்டும் பெற்றுக்கொண்டார். இதற்கிடையில் அலெக்சிஸின் பெற்றோரின் பணியாளர்கள் அவரைத் தேடி சிரியாவுக்கு வந்தனர். அலெக்சி‘க்கு மகிழ்ச்சியும் எதிர்பாராத அதிர்ச்சியுமாக அவர்கள் அலெக்சிஸை அடையாளம் கண்டுகொள்ளவில்லை. அவர்கள் அவரை பிச்சைக்காரன் என்றெண்ணி அவருக்க பிச்சை போட்டனர்.
கடவுளின் மனிதர் :
கன்னிமரியாள் அலெக்சி‘க்குக் காட்சி தந்து, அதிசயமாக அவரிடம் பேசியதையும் அவரைக் கடவுளின் மனிதர் என்று அழைத்ததையும் கண்டு, அலெக்சிஸ் எல்லோருக்கும் தெரிந்த மனிதராக மாறினார். மறைவாக வாழமுடியாமல், தர்சு நகரிலுள்ள தூய பவுலின் இல்லத்திற்கு செல்ல கப்பலேறினார். ஆனால் இத்தாலியில் உரோம் நகரை நோக்கிக் காற்று வீசியதால், அவர் உரோம் வந்து சேர்ந்தார். அலெக்சிஸ் தனது குடும்பத்தாரின் வீட்டுக்குச் சென்றார். அவரது பெற்றோர் அவரை இனம் கண்டுகொள்ளவில்லை. அலெக்சிஸ் தங்குவதற்கு இடம் கேட்டதின்பேரில், படிக்கட்டுகளின் கீழ் படுத்துறங்க அனுமதி அளிக்கப்பட்டது. அங்கேயே மேலும் 17 ஆண்டுகள் தங்கியிருந்து ஜெபிப்பதும் குழந்தைகளுக்கு மறைக்கல்வி கற்றுக்கொடுப்பதுமாக வாழ்ந்து வந்தார். இறப்பு தன்னை நெருங்குவதை உணர்ந்த அலெக்சிஸ், அவர் தனது வாழ்க்கைச் சரிதையை பற்றி கதையாகக் கடிதத்தில் எழுதினார். 404 ஆம் ஆண்டு போப் நிகழ்த்திய திருப்பலியில் ஒரு அசரீரீ குரல் கேட்டது. கடவுளின் மனிதரைத் தேடுங்கள், அவர் உரோமுக்காக வேண்டுவார். கடவுள் அவருக்கு செவிசாய்ப்பார். அவர் வெள்ளிக்கிழமையன்று இறப்பார். அந்த வாரம் அலெக்சிஸ் படிக்கட்டின் கீழ் தனது கையில் கடிதத்துடன் இறந்து கிடந்தார்.
செபம் :
உங்களுக்கு ஒரு ஆசிரியர் உண்டு ; நீங்கள் எல்லோரும் சகோதரர்கள். இந்தப் பூவுலகில் யாரையும் தந்தையயன்று அழைக்க வேண்டாம். ஆனால் உங்களுக்கு விண்ணுலகில் உங்களுக்கு மீட்பராகிய தந்தை உண்டு. உங்களுள் மேலானவர் உங்களுக்கு உதவியாளராக இருக்கட்டும். தன்னை உயர்த்துகிறவர் தாழ்த்தப்படுவார். ஆனால் தம்மை தாழ்த்துகிறவர் உயர்த்தப்படுவார்.
இவர்களது அடிச்சுவட்டில் :
சுகபோகமான வாழ்க்கையத் துறந்து, அலெக்சிஸ் ஒரு பிச்சைக்காரராக தனது வாழ்க்கையை மாற்றிக்கொண்டார். பிறர் கொடுக்கும் தானதர்மங்களைக் கொண்டு தனது புதிய வாழ்க்கையை நடத்திச் செல்ல அவர் முடிவு செய்தார். இன்று பிறரைச் சார்ந்து நில்லாமல், தன்னிறைவு பெற வேண்டுமென்பதே ஏழைகளின் குறிக்கோளாக இருக்கிறது. லாஸ் ஏஞ்சல்ஸ் நகரிலுள்ள வணிகர் ஜாண் பிரயான்ட் பிறர்க்கு உதவுவதில் மகத்தான செயலாற்றுகிறார்.
அமெரிக்காவில் முதல்முதலாக இலாப நோக்கமில்லாத முதலீடு வங்கி நிறுவனத்தை நிறுவினார். அதற்கு செயல்படும் நம்பிக்கை என்று பெயர் சூட்டினார். நிதி நிறுவனங்களின் உதவி பெற இல்லாத தனி நபர்களுக்கும் குடும்பங்களுக்கும் தன் நிறைவு ஊக்கம் அளிக்கிறது. இலாப நோக்கமில்லாத வங்கி நிறுவனக் குழுமங்களின் தலைமை நிர்வாக அதிகாரியாகவும், நகரங்களுக்கிடையே கனினி சார்ந்த சைபர் சிறு நிறுவனங்களும் செயல்படும் நம்பிக்கையின் துணை நிறுவனங்களும் இணைந்த வலைத்தள சேவை மையங்களுக்கும் பிரயான்ந் தலைமை நிர்வாக அதிகாரியாகப் பணியாற்றி வருகிறார். நம்பிக்கை நிறுவனம் செய்துவரும் நிதியுதவி சேவைகள் பின்வருமாறு,
10 முதல் 20 வயதுடைய இளைஞர்களுக்கு பொருளியல் கல்வி அளித்தல். சிறு சிறு வியாபரம் செய்ய உதவுதல். 260 லட்சம் ஏழை மக்கள் பற்று வரவு அட்டை பழக்கத்துக்குக் கொண்டு வருதல்.